டில்லி

கொரோனாவால் உயிரிழந்த 1616 சுகாதார பணியாளர்களுக்கு ரூ.808 கோடி காப்பீட்டு தொகை அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை   இன்றைய காலை தகவலின்படி இதுவரை இந்தியாவில் 4.24 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 5.05 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 4.10 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 8.92 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று கொரோனா குறித்த கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில், “கடந்த 2020 ஆம் வருடம் கொரோனாவை எதிர்த்துப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக பிரதான் மந்திரி கரிப் கல்யாண் பேக்கேஜ் என்னும் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதன் மூலம் கொரோனா தொற்று நோயை எதிர்த்துப் போராடி உயிர் நீத்த 1,616 சுகாதாரப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.808 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுடன் நேரடியாகத் தொடர்பு  கொண்டு அவர்களை பராமரித்து அதனால் ஆபத்தில் சிக்குவதில் அதிகம், பேர் சுகாதார பணியாளர்களாக உள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் பொதுத்துறை மற்றும் தனியார் சுகாதார பணியாளர்கள் உட்பட சுமார் 22.12 லட்சம் பேர் தலா ரூ. 50 லட்சம் வரையிலான தனிப்பட்ட காப்பீடு பெற முடியும்..  இந்தியாவில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாம் அலையின் போது  உலகுக்கே முன்மாதிரியாக இந்திய மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட அனைவரும் பணி புரிந்தனர்.” எனத் தெரிவித்துள்ளார்.