டில்லி

நான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க தலைக்கவசம் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நமது நாட்டில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழக்கின்றனர். பெரும்பாலான உயிரிழப்புகள், தலைக்கவசம் அணியாததால் ஏற்படுகின்றன. இதைத்  தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர் களும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த 2019-ம் ஆண்டுநேரிட்ட விபத்துகளில் 11,168 குழந்தைகள் உயிரிழந்தன. நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 31 குழந்தைகள் விபத்தில் உயிரிழக்கின்றன. எனவே இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வரைவு விதிகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டன. இவ்விதிகளை மீறுவோருக்கு ரூ.1,000 அபராதம் மற்றும் 3 மாதம் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த வரைவு விதிகளில்

“நான்கு வயது வரையிலான குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, ஓட்டுநர் உடன் குழந்தையை இணைக்கும் வகையில் பெல்ட் அணிவிக்க வேண்டும்.

இந்த பெல்ட் இந்தியத் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (பிஐஎஸ்) தர நிர்ணயத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

இணைப்பு பெல்ட் எடை குறைவாகவும், நீளத்தைக் கூட்டி, குறைக்க ஏதுவாகவும், நீர்புகா தன்மையுடனும், தரத்துடனும் இருக்க வேண்டும். 30 கிலோ எடையைத் தாங்க வேண்டும்.

இருசக்கர வாகனத்துக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் 9 மாதம் முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பிஐஎஸ் தரத்துடன்கூடிய தலைக்கவசத்தைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது.”

என்பன உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய வரைவு விதிகள் வெளியிடப்பட்டு மக்களிடம் கருத்துக் கோரப்பட்டது.

மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்ட இறுதி செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”இந்த அறிக்கை மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 129-ன் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் வாகனங்களில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு சேணம் அல்லது தலைக்கவசம் பயன்படுத்தப்பட வேண்டும்.

அப்போது மோட்டார் வாகனங்களின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டராக மட்டுமே இருக்க வேண்டும்

இந்த விதிகள் மத்திய மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்த) விதிகள் 2022 வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குப் பின்  அமலுக்கு வரும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.