பெரம்பலூர்: வெளிநாடு செல்லும் இந்தியர்களின் சான்றிதழ்களை இணைய வழியில் சரி பார்த்து முத்திரையிட மத்திய அரசு  அறிமுகப்படுத்தியுள்ள இ சனத் இணைய வழி சேவை திட்டம் பெரம்பலூரில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது குறித்த்து பெரம்பலூர் ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது: வெளிநாடுகளில் வேலை,கல்வி மற்றும் சார்பு இசைவு நுழைவு (dependent visa) கோரும் இந்தியர்கள், வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு அரசுகளுக்கு கல்வி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் போன்ற பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்களின் உண்மை தன்மையை உறுதி செய்ய மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் முத்திரையிடப்பட வேண்டும் என்று சில நாடுகள் கோருவதால் அவற்றை இணைய வழியில் சரிபார்த்து முத்திரையிட ஏதுவாக மத்திய அரசானது இ சனாத் ( E sanad) என்ற இணைய வழி சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் தொடர்புடைய தூதரகங்கள், முத்திரையிடப்பட்ட சான்றிதழ்கள் கோரும் பட்சத்தில் பொதுமக்கள் www.esanad.nic.in என்ற இணையத்தில் விபரங்களை பதிவு செய்து, ஆவணங்களை பிடிஎப் முறையில் பதிவேற்றம் செய்து உரிய கட்டணம் செலுத்தினால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வெளியுறவு அமைச்சகத்தால் அவர்களின் வீடுகளுக்கே சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த சேவையை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கூறி உள்ளார்.