டெல்லி: தமிழ்நாட்டில் சைகோவ்-டி டிஎன்ஏ கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக உலக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக நாடுகள் எடுத்துவரும் தடுப்பூசியால், ஓரளவு கட்டுக்குள் வந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், தற்போது ஒமிக்ரான் எனப்படும் வீரியம் மிக்க பிறழ்வு வைரஸ் தென்னாப்பிரிகாவில் இருந்து பரவத்தொடங்கி உள்ளது. உலகின் 23 நாட்களில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ள நிலையில், இந்தியாவிலும் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன், தடுப்பூசி போடும் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், 3வதாக சைகோவ்-டி என்ற தடுப்பூசி விரைவில் அறிமுகமாகவுள்ளது.

ஒமிக்ரான் பரவல், கொரோனாவின் 3வது அலை என கருதப்படும் நிலையில், 3வது அலையை தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு ஏற்கனவே முதற்கட்ட தடுப்பூசி போட்டவர்களுக்கு 2வது கட்டமாகவும், தடுப்பூசி போடாதவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விரைவில் 3வதாக சைகோவ்-டி என்ற பெயரில் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ளது.  அதன்படி, சைகோவ் டி டிஎன்ஏ தடுப்பூசி முதற்கட்டமாக 11.6 லட்சம் டோஸ்தடுப்பூசிகள் விரைவில் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளன.

ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் சைகோவ்-டி தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது. அதிக மக்கள் முதல் டோஸ் செலுத்தாமல் உள்ள மாநிலங்களில் சைகோவ்-டி தடுப்பூசியை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

பிகார், ஜார்கண்ட், மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் மாநிலங்களிலும் விரைவில் சைகோவ்-டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.