டில்லி:

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான மத்திய உள்துறையின் உத்தரவை சென்னை  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ள நிலையில், அதை எதிர்த்து, மத்தியஅரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி  மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால்,  மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

புதுவை ஆளுநர்  கிரண் பேடிக்கு மத்திய உள்துறை கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம், புதுச்சேரி மாநில அரசின்  கோப்புகளை ஆய்வு செய்ய கிரண்பேடிக்கு  கூடுதல் அதிகாரத்தை வழங்கியிருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏப்ரல் 30ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் மாலிந  அரசின் நடவடிக்கைகளில் அன்றாடம் துணைநிலை ஆளுநர் தலையிடக் கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதையடுத்து கிரண் பேடி தரப்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடர திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு புதுச்சேரி மாநில அரசு அனுமதி வழங்காது என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தனிப்பட்ட முறையில் மேல்முறையீடு செய்வதற்கு கிரண் பேடிக்கு உரிமை உள்ளது. அதற்கு அவர் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்யலாம். துணைநிலை ஆளுநராக அவர் வழக்கு தொடர வேண்டுமென்றால் அதற்கு அரசின் அனுமதி வேண்டும். அதற்கான அனுமதியையும், நிதியையும் நாங்கள் ஒதுக்கித் தர மாட்டோம்” என்று கூறியிருந்தார்

‘இதையடுத்து,  புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (மே 5) கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மனுவை உடனே விசாரிக்க முடியாது என மறுத்த நீதிமன்றம், வழக்கை பட்டியலிட அனுப்பியது.