புதுச்சேரி:

புதுச்சேரியில் முதல்வர் கவர்னருக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுவை கவர்னர் கிரண்பேடி,  மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து புகார் கூறி வருகிறார்.

மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்தும், அது தொடர்பாக சென்டாக்கில் நடைபெற்ற சிபிஐ சோதனை குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

டில்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைந்தாலும், அங்குள்ள கவர்னரின் அதிகாரமே கொடிகட்டி பறக்கிறது.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசு பதவி வகித்து வருகிறது. முதல்வ ராக நாராயணசாமி இருக்கிறார். ஆனால், கவர்னராக பாரதியஜனதாவை சேர்ந்த கிரண்பேடி இருக்கிறார். இதன் காரணமாக இருவருக்குமிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி மோதல் ஏற்படுவதும் பின்னர் சமாதானமாவதுமாக இருந்து வந்தது.

தற்போது இருவருக்கிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து முதலிவரின் நிதி ஆதாரத்தை ரத்து செய்வதாக கிரண்பேடி அறிவித்திருந்தார்.

இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து கவர்னர் குறித்து புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், டில்லி சென்றுள்ள கிரண்பேடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து முதல்வர் நாராயணசாமிமீது புகார் வருகிறார்.

மேலும்,  சென்டாக் மாணவர் சேர்க்கை முறைகேடுகள் தொடர்பாக நடைபெற்ற சிபிஐ சோதனையின்போது கிடைக்கப்பெற்ற  ஆவணங்கள் தொடர்பாகவும் உள்துறை அமைச்சரிடம் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக புதுவையில் பரபரப்பு நிலவி வருகிறது.