டில்லி

நிலக்கரி ஊழலில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் நிலக்கரி செயலர் எச் சி குப்தா  விடுவிக்கப்பட்டுள்ளார்.

டில்லியைச் சேர்ந்த புஷ்ப் ஸ்டீல் மற்றும் மைனின்ங் நிறுவனம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிரம்மபுரி நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க விண்ணப்பித்திருந்தது.  அந்த நிறுவனத்துக்கு போதுமான அனுபவம் மற்றும் தேவையான முதலீட்டு நிதி இல்லாத நிலையில்  இருந்துள்ளது  ஆயினும் இந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.   இதில் ஊழல் நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி சிபிஐ விசாரணை செய்தது.

இந்த விசாரணையில் தவறான பரிந்துரை காரணமாகக் குத்தகை வழங்கப்பட்டது தெரிய வந்தது.  அப்போது நிலக்கரி செயலராகப் பனி புரிந்த வந்த எச் சி குப்தா இந்த பரிந்துரையை அளித்துள்ளார்.  அவர் இந்த நிறுவனம் ஏற்கனவே ரூ.3.91 கோடி மதிப்பிலான இரும்புத் தாதுச் சுரங்கப் பணிகளைச் செய்துள்ளதாக சான்றிதழ் அளித்துள்ளார்.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பரத் பரஷார் விசாரணையின் கீழ் நடந்தது. நீதிபதி பரத் பரஷார் தனது தீர்ப்பில் அரசு தரப்பில் இந்த குற்றம் நிகழ்ந்ததற்காகச் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும்  முன்னாள் நிலக்கரி செயலர் குப்தா குற்றம் புரிந்ததற்கான போதுமான சான்று இல்லாததால் விடுவிக்கப்படுவதாகத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.