டில்லி

நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் அதானி குழுமத்தின் மீது தொடங்கப்பட்ட முதற்கட்ட விசாரணையை சிபிஐ முடித்துக் கொண்டுள்ளது.

கடந்த 2014 ஆம் வருடம் மே மாதம் நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில் அதிக விலைக்கு விற்றதாக அதானி குழுமம் மீது குற்றம் சாட்டப்பட்டது.  இதனால் ரூ.5500 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட இந்த வழக்கில் சிபிஐ தனது முதல் கட்ட விசாரணையை தொடங்கியது.  அதானி குழுமத்தை சேர்ந்த மூன்று நிறுவனங்கள் தென் கொரியா மற்றும் சீனாவில் இருந்து வாங்கிய நிலக்கரியை அதிக விலைக்கு விற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விசாரணை அதற்குப் பின் முன்னேற்றம் காணவில்லை.  இது குறித்து டில்லி உயர்நீதிமன்றம் சிபிஐக்கு கடிதம் அனுப்பியது.   இதற்கு சிபிஐ அளித்த பதிலில், “நீதித்துறை விவகாரங்கள் காரணமாக இந்த வழக்கின் விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது.  இந்த ஏற்றுமதி விவகாரங்களில் பல மாநில அரசுகளும் சம்மந்தப்பட்டுள்ளதால் இந்த விசாரணையை தொடருவது அந்த மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளுக்கு விரோதம் ஆகும்”  என தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு எழுந்த பிறகு பாஜக அரசு மத்திய அரசுக்கு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.