சென்னை:

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் இன்று முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.

தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் பிரச்சினை பற்றி பூதாகரமாய் உருவெடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள்,  மாணவர் அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் அறிவித்து இருக்கின்றன. அந்த வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர்வண்டி மறியல், கடையடைப்பு, வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு என்று பல்வேறு போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

ஏப்ரல் 3-ம் தேதி (இன்று):- அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்.

* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு.

* காவிரி டெல்டா விவசாயிகள் தொடர்வண்டி மறியல் போராட்டம்.

* தமிழகம், புதுச்சேரியில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.

4-ம் தேதி:- த.மா.கா. சார்பில்  காவிரி படுகை மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம் தொடக்கம்.

5-ம் தேதி:- தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்.

* அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம்.

* தமிழகம், புதுச்சேரியில் நீதிமன்ற புறக்கணிப்பு.

6-ம் தேதி:- திருவாரூரில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

* திருச்சியில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா.வினர் உண்ணாவிரதம்.

* தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம்.

10-ம் தேதி:- காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நெய்வேலி அனல்மின் நிலையம் முற்றுகை போராட்டம்.

11-ம் தேதி:- பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம்.

* தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கடையடைப்பு போராட்டம்.