சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவரவர் சாதியை பொறுத்து அவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்ட விவகாரத்தை அன்மையில் தி வயர் செய்தி நிறுவனம் வெளியிட்டது.

ராஜஸ்தான் மாநில சிறைகளில் இதுபோன்ற சம்பவம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளதை அந்த செய்தி சுட்டிக்காட்டியது.

இந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்து, பிப் 3ம் தேதி ராஜஸ்தான் அரசு சிறைதுறைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதுவரை சிறையில் உள்ள கழிவறைகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் வேலையை தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிக்கப்பட்டு வந்தது.

அதேபோல் சமையல் செய்யும் உரிமை குற்றம் செய்ததாக பிடிபட்டு தண்டனை பெறும் பிராமணர்களுக்கோ அல்லது வேறு உயர் சாதி வகுப்பினருக்கோ வழங்கப்பட்டது.

மாநில அரசின் இந்த புதிய அறிவுறுத்தலின்படி இனி இதுபோன்ற நடைமுறை இருக்காது என்று நம்பப்படுகிறது.

சமீபத்தில் பீகாரை சேர்ந்த அஜய்குமார் என்ற குற்றவாளியை அவரது சாதி பெயரை வைத்து அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய பணிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, நீதிமன்ற தலையீட்டிற்கு பின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

“சிறை விதிகள் கையேட்டில் இத்தனை ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்குப்பின் அதில் மாற்றங்களை கொண்டு வர வழிவகுத்திருப்பதாக” சிறைத்துறை கூடுதல் ஐ.ஜி ராஜிவ் டஸாட் தெரிவித்துள்ளார்.

“ஒரிசா, கோவா மற்றும் டெல்லியை தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பின் புதிய சிறை வழிகாட்டு நெறியை இதுவரை அமல்படுத்தவில்லை” என்று தெரிவித்த அவர், “வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் ராஜஸ்தான் மாநில சிறை வழிகாட்டு நெறிகள் முழுமையாக மாற்றியமைக்கப்படும்” என்று மேலும் தெரிவித்தார்.

“சிறையில் மனு தர்மபடி சாதிய படிநிலைகள் கையாளப்படுகிறது” என்று குற்றம்சாட்டிய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திஷா வடேகர், “சிறைக்கு வெளியில் சாதிய ரீதியாக என்னவெல்லாம் நடைமுறையில் உள்ளதோ அதுவே சிறைக்குள்ளும் கடைபிடிக்கப்படுவாதாகவும், வெளியே இது குறித்து குரல் எழுப்ப வாய்ப்புள்ளது உள்ளே அது இல்லை” என்று கூறினார்.

மேலும், “இந்த புதிய வழிகாட்டு விதிகள் முறையாக கடைபிடிக்கமடுகிறதா என்பதை முறையாக கண்காணிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த புதிய வழிகாட்டுதலால் எந்த பலனும் இல்லை” என்றும் தெரிவித்தார்.

பிகார், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சிறை விதி மாற்றம் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை, மதுரை மத்திய சிறை உள்ளிட்ட சிறைகளில் கைதிகளின் சாதி அடிப்படையில் செல்களில் அடைத்து வைக்க இட ஒதுக்கீடு செய்யும் அவலங்கள் தொடர்வதாக அந்த செய்தி மேலும் குறிப்பிடகிறது.

– நன்றி தி வயர்