டில்லி

விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வோருக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் சாலை விபத்தில் சிக்கியவர்களை அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் இதை ‘கோல்டன் ஹவர்’ எனவும் சொல்கின்றனர்.    அதே வேளையில் சாலை விபத்துகளில் சிக்கியவர்களைச் சரியான நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாததால் பலர் உயிரிழக்கின்றனர்.விபத்தில்  காயம் அடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்வதால் வழக்கு, காவல்துறை விசாரணை என பல்வேறு தொல்லைகள் வரும் என பயப்படுகின்றனர்.

இதைத் தவிர்க்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்ரும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில், ”நல்ல உள்ளத்துடன் சாலை விபத்தில் சிக்கியவர்களை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரைக் காப்பாற்ற உதவும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.  அவர்கள் இதற்காக உள்ளூர் கால்வை நிலையத்தில் இருந்தோ அல்லது மருத்துவமனையில் இருந்தோ ரசீதைப் பெற்று வரவேண்டும்.

இதை மாவட்ட அளவிலான குழுக்கள் பரிசீலனை செய்து மாதம்தோறும் இந்த பரிசுகள் வழங்கப்படும்.  ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்தத் திட்டத்துக்காக தலா ரூ.5 லட்சத்தை மத்திய அரசு வழங்கும். இதிலிருந்து ரொக்கப் பரிசுகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும்.    இந்த திட்டத்தை உள்துறை முதன்மைச் செயலர் தலைமையில் மாநில கண் காணிப்புக் குழு, கண்காணித்து அமல்படுத்தும். இத் திட்டத்தின் கீழ் ஒரு நபர், ஓராண்டில் 5 முறை பரிசுகளைப் பெற முடியும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.