மதுரை:

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கட்டிடத் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத்  தொழிலாளர்களுக்கு தமிழகஅரசு நிவாரணம் வழங்க உத்தரவிடக்கோரி   உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு  தாக்கல் செய்திருந்தார்.

மனுவில், கொரோனா தொற்று காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள கட்டடத் தொழிலாளர்கள் வேலையின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகஅரசு,  நலவாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் நிவாரணமாக இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  அவர்களது வாழ்க்கை வேலையின்றி, கடந்த மூன்று மாதமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும், கட்டடத் தொழிலாளர்கள் பெரும்பாலும் அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால், இவர்கள் தங்களது பதிவினை புதுப்பிக்காமல் உள்ளனர் . மேலும், கட்டடத் தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து தான் தொழில் மேற்கொண்டுவருகின்றனர். இதனாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது பதிவைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். அவ்வாறு புதுப்பிக்காமல் உள்ள தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.

டெல்லி அரசு கட்டடத் தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் என இரு முறை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.

பஞ்சாப் அரசு 3 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக இரு முறை வழங்கியுள்ளது.  உத்தரப் பிரதேச அரசும் கட்டடத் தொழிலாளர்களுக்கு தலா 1,000 ரூபாய் என மூன்று மாதத்திற்கு வழங்கியுள்ளது.

இவற்றை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசு கட்டடத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிவாரணத் தொகை என்பது மிகமிகக் குறைவு, எனவே, தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையை 5 ஆயிரம் ரூபாய் தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தங்கள் பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் இந்தத் தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர்  அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.