சென்னை:  கொரோனா காலத்தில், திமுக அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்தவர்கள் குறித்து விவரங்களை திமுக அரசு முறையாக வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டி, கடந்த 2021ம் ஆண்டு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.   தர்மபுரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் போராட்டம் நடத்தியதாகக் கூறி, அந்த பகுதியில் உள்ள வெள்ளங்கொண்டபாளையம் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் கே.பி.அன்பழகன் மீது சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் மற்றும் நோய்த்தொற்றைப் பரப்புதல் உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் தர்மபுரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கே.பி.அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் ஆஜராகி, எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி, வழக்கில் தாமதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, கே.பி.அன்பழகனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.