மதுரை:

துரை அருகே உள்ள சமயநல்லூர்  ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகள், காப்பகத்தின் நிர்வாகியால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிர்வாகி ஞானப்பிரகாசம் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன்  ஆகியோர் நடத்தி வந்தனர்.  இந்த காப்பகத்தில் 25க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கியுள்ளனர். இவர்களில் பலர் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்று திடீர் சோதனை நடத்திய  மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் அங்கிருந்த சிறுமிகளிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது, பல சிறுமிகள் காப்பக நிர்வாகிகளால் கொடுமைப்படுத்தப்படுவது தெரிய வந்தது. மேலும், 4 சிறுமிகள், தங்களை காப்பகத்தை சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவர் பலமுறை அவரது அலுவலகத்தில் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக வும், இதுகுறித்து வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் சிறுமிகள் கண்ணீர்மல்க  தெரிவித்தனர்.

இதையடுத்து, 4 சிறுமிகளும் உடனடியாக அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். மற்ற சிறுமிகளும் தற்போது, வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கிரேஸ் ஷோபியாபாய் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் காப்பக நிர்வாகி ஆதிசிவனை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக, மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.  இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.