சென்னை: மேற்குவங்க முதல்வர் மம்தாவுக்கு ஏற்பட்ட காயம், நாடு முழுவதும், அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மம்தா பயணம் செய்தகாரின் கதவு இடித்ததால்தான், அவரது காலில் எலும்பு முறிவு எட்டுப்பட்டு இருப்பதாக, மேற்கு வங்க மாநில தலைமைச்செயலாளர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

நந்திகிராமில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு, அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடலின் பல பாகங்களில் அடிபட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிவித்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  ஆனால், மம்தா தாக்கப்பட்ட சம்பவம் பல்வேறு யூகங்களை எழுப்பியது. மாநில முதல்வருடன் எப்போது மாநில காவல்துறையினர் பாதுகாப்பு இருக்கும்போது, அவர்களை மீறி எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக மாநில அரசின் தலைமைச்செயலர் அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையமும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மம்தாவின் கால்முறிவுக்கு காரணம், அவரது கார், சாலையோரம் உள்ள கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.

மார்ச் 10 ம் தேதி இந்த சம்பவம் நடந்தபோது நந்திகிராமில் சாலையில் ஏராளமான மக்கள் திரண்டிருந்ததாகவும், அப்போது காரின் கதவு மோதி அவரது காலில் காயம் ஏற்பட்டதாகவும்  மேற்குவங்க தலைமைச் செயலாளர் அலப்பன் பாந்தோபத்யாயா தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மேலும், கார் சாலையோர கம்பத்தில் மோதியது குறித்து சரியான முறையில் தெரிவிக்காமல், ஒரு இரும்புக் கம்பம் முதல்வர் மம்தா பானர்ஜியின் காரிலிருந்து வெகு தொலைவில் இல்லை என்று தெளிவற்று கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மம்தா பானர்ஜி 4 அல்லது 5 நபரால் நந்திகிராமில் தாக்கப்பட்டதாக  கூறிய நிலையில், அவரது மாநிலஅரசின் தலைமைச் செயலாளர் அறிக்கையோ வேறு விதமாக உள்ளது. இது மீண்டும சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.