உலகக்கோப்பையை வெல்வதற்கான அதிக வாய்ப்பு இந்திய அணிக்குத்தான் உள்ளது என இலங்கை கேப்டனும், அதிக வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்குத்தான் உள்ளது என்று தென்னாப்பிரிக்க கேப்டனும் கருத்து தெரிவித்துள்ளனர்.

“இந்திய அணி சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு அந்நாட்டின் ஐபிஎல் போட்டிகளும் ஒரு காரணம். அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள இதர 3 அணிகளுடன் ஒப்பிடுகையில், இந்திய அணிக்கே கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இந்திய அணியின் ரோகித் ஷர்மா ஒவ்வொரு போட்டியிலும் தொடக்கத்தில் களமிறங்கி, பெரிய ரன்களை எட்டுகிறார். அவரின் ஆட்டம் இந்திய அணிக்கு பெரியளவில் துணைபுரியக்கூடியதாய் உள்ளது. ‍அதேசமயம், அந்தக் குறிப்பிட்ட நாளில் எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ, அந்த அணியே வெல்லும்” என்றார் இலங்கை அணி கேப்டன் கருணரத்னே.

“ஆஸ்திரேலிய அணிக்கே கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம். ஏனெனில், அவர்கள் கடந்தகால உலகக்கோப்பை தொடர்களில் செயல்பட்ட விதத்தை நாம் மறந்துவிடலாகாது. அதேசமயம், இந்திய அணிக்கும் கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதையும் மறுக்கலாகாது” என்றார்.