சென்னை: கொரோனா உயிரிழப்புகளுக்கு அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக,  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,51,309 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.21% ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 27,356 ஆக உள்ளது.

இந்த நிலையில்,  கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர், கொரோனா மரணத்துக்கு இழப்பிடு வழங்கக்கோரி 2 பொநலமனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

ஒரு மனுவில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கிற்கு நிவாரணம, உயிரிழந்தோர்  வாரிசுகளுக்கு இழப்பீடு , அவர்களின் குழந்தைகளின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

2வது மனுவில்,  கோவை சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறையாததால் அங்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்திருந்தார்.

இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி சந்தீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையின்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடரக்கூடிய பெரும்பாலான பொதுநல வழக்குகள் விளம்பரத்துக்காகவே தாக்கல் செய்யப்படுகிறது என்று கூறியதுடன், கொரோனா மரணம் நிகழ்வுகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதுடன் இது தொடர்பாக, தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்க  மத்திய, மாநில அரசுகள் ஏற்கனவே பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், அவை நீதிமன்றத்தில் தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் தற்போதைய சூழலில்வ இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் தேவைப்பட்டால் நீதிமன்றம் தாமாக வழக்கை எடுத்து விசாரிக்கும் என கூறி 2 வழக்குகளையும் முடித்து வைத்துள்ளனர்.