ட்டாவா

னடா அரசு தங்கள் நாட்டுக்குள் போலி ஆவணங்கள் மூலம் நுழைந்த 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளது.

லவ்பிரீத் சிங் என்னும் பஞ்சாப் மாநிலம் சத்மலா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் 6 ஆண்டுகளுக்கு முன் மாணவர் விசாவில் கனடா சென்றுள்ளார். கனடாவுக்கு இவருடன் சென்ற இந்திய மாணவர்கள், நிரந்தர குடியுரிமை கோரி கனடா அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். விசாரணையில் லவ்ப்ரீத் சிங் உட்பட 700 இந்திய மாணவர்கள் பஞ்சாபில் இருந்து கனடாவுக்குப் போலி ஆவணங்கள் மூலம் வந்துள்ளது கண்டறியப்பட்டது.

கனடா எல்லை சேவை முகமை விரிவான விசாரணை நடத்தி லவ்ப்ரீத் சிங் வரும் 13-ம் தேதிக்குள், கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.  இதைப்போலக் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, 700 இந்திய மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் கனடா சென்றுள்ளனர்.

இவர்களுக்குப் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜலந்தரில் உள்ள முகவர் பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர், கனடாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பெயரில் போலி மாணவர் சேர்க்கை கடிதங்களை வழங்கியுள்ளார். மாணவர்கள் இதன் மூலம் கனடாவில் படிப்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளனர். அதிகாரிகளால் இந்த போலிக் கடிதத்தைத் தூதரக அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்திய மாணவர்கள் சென்றபோதுதான், அவர்கள் வைத்திருந்தது போலி கடிதங்கள் எனத் தெரிந்தது.  உடனடியாக முகவர் பிரிஜேஷ் மிஸ்ராவை மாணவர்கள் தொடர்பு கொண்டபோது, அவர் மன்னிப்பு கேட்டு, வேறு கல்லூரிகளில் சேர ஏற்பாடு செய்வதாகக் கூறி அவர்களைச் சமாளித்துள்ளார்.

கனடா எல்லை சேவைகள் முகமை இதைக் கண்டறிந்து, போலி ஆவணங்கள் மூலம் கனடா வந்த இந்திய மாணவர்கள் 700 பேர் வெளியேறும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த மாணவர்கள் கடந்த 5-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக பஞ்சாபி சங்கங்களின் சர்வதேச தலைவரும், ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினருமான. விக்ரம்ஜித் சிங் சானே, கனடா அரசுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்பி அதில், மாணவர்கள் மோசடி செய்யவில்லை என்றும், அவர்களுக்குப் போலி கடிதங்களைக் கொடுத்து முகவர் பணம் பெற்று மோசடி செய்துள்ளார் என விளக்கினார்.

விக்ரம்ஜித் சிங்கின் வேண்டுகோளை அடுத்து, இந்திய மாணவர்களை வெளியேற்றும் நடவடிக்கையைக் கனடா அரசு நிறுத்தி வைத்துள்ளது.