டொரான்டோ: தங்களுக்கான ஊதியம் வந்துசேராத காரணத்தால், டொரான்டோ நேஷனல்ஸ் மற்றும் மான்ட்ரீல் டைகர்ஸ் அணியின் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குளோபல் டி-20 கனடா போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால், நிர்வாகிகள் தரப்பிலோ வேறு காரணங்கள் கூறப்பட்டன. தற்போதுதான் உண்மை வெளிவந்துள்ளது. வீரர்களின் போராட்டத்தால் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.

இரண்டு அணிகளின் வீரர்களுமே, தங்களின் ஹோட்டல்களிலிருந்து, போட்டி நடக்கும் பிராம்டனிலுள்ள சிஏஏ மையத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற மறுத்து, தங்களுக்கு வரவேண்டிய ஊதியத்தொகை நிலுவையைக் கோரி போராட்டம் நடத்தினர்.

ஆனால், விளையாட்டு வீரர்கள், குளோபல் டி-20 லீக் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட நிடைமுறை சார்ந்த சிக்கல்களாலேயே போட்டித் துவங்குவதற்கு தாமதமானதாக ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இப்போட்டி ஒளிபரப்பானபோதோ, குளோபல் டி-20 கனடா சார்பாக டிவிட்டரில் பதிவிடப்பட்டபோதோ, இந்தப் போராட்டம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறு என்று காரணம் கூறப்பட்டது. டொரான்டோ நேஷனல் அணியின் தலைவராக இந்தியாவின் யுவராஜ் சிங் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.