டெல்லி: ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் அலுவல் மொழியாக உருது, டோக்ரி, காஷ்மீரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது.

மத்திய அரசு பணியாளர்களின் திறனை மேம்படுத்த மிஷன் கர்மயோகி என்னும் திட்டத்தை செயல்படுத்தவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு  காஷ்மீர் மற்றும் லடாக் என தனித்தனி யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.