ஸ்லாமாபாத்

ந்தியாவின் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரத்தில் தலையிடும் தவறான நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கூறி உள்ளது

நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். சுமார் 9 மணிநேரம் நீண்ட விவாதத்துக்குப்பின் மசோதா நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இந்த மசோதாவின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபின் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்கம் இந்த மசோதாவைக் கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் அரசு  இந்திய அரசு நிறைவேற்றியுள்ள பிற்போக்குத்தனமான, பாகுபாடுகளை உருவாக்கும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கண்டிக்கிறது.   இந்த மசோதா அனைத்து சர்வதேச விதிமுறைகளையும், ஒப்பந்தங்களையும் மீறியுள்ளது.  இந்த மசோதா அண்டை நாடுகள் மத விவகாரத்தில் இந்தியா தவறான, நல்லெண்ணமற்ற நோக்கத்தில் தலையிடும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த மசோதா சர்வதேச மனித உரிமைகளை முழுமையாக மீறியும், மதரீதியாகவே அல்லது நம்பிக்கை சார்ந்த அடிப்படையில் பாகுபாடு பார்க்கக்கூடாது என்ற சர்வதேச உடன்படிக்கைகளை மீறிக் கொண்டு வரப்பட்டுள்ளது.   அத்துடன் இது இந்தியா பாகிஸ்தான் இடையே இருக்கும் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு முரணான வகையில் உள்ளது.  அந்தந்த நாடுகளின் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்து கவலையை இந்த  மசோதா ஏற்படுத்துகிறது.

இந்தியாவை இந்து தேசமாக மாற்ற வேண்டும் என்ற வலதுசாரி இந்து தலைவர்கள் பல ஆண்டுகளாகச் சிந்தித்து, இடைவிடாமல் பேசி வரும் நிலையில், அதை நனவாக்கும் வகையில் இந்திய அரசு இதைக் கொண்டுவந்துள்ளது.   இந்த மசோதா தீவிரமான இந்துத்துவா சித்தாந்தங்கள் மற்றும் மதரீதியான மேலாதிக்க சிந்தனைகளுடன் உள்ளது.  இது அண்டை நாடுகளின் மதரீதியான விவகாரங்களில் தலையிடுவதாக இருப்பதால் பாகிஸ்தான் இதை ஆதரிக்காது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரமதர் இம்ரான் கான் டிவிட்டரில், “இந்தியாவின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா பாகிஸ்தானுடன் இந்தியா வைத்துள்ள இருதரப்பு ஒப்பந்தங்களையும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், விதிகளையும் மீறுவதாக அமைந்துள்ளது. இது ஆர்எஸ்எஸ் கூறி வரும் இந்து ராஷ்டிராவின் விஸ்தரிப்பு வடிவத்தின் ஒருபகுதி” எனத் தெரிவித்துள்ளார்