டில்லி

கோப்புக்களை எரிப்பதன் மூலம் மோடி தப்ப முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டில்லி நகரில் உள்ள சாஸ்திரி பவனில் பல மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் பல்லாயிரக்கணக்கன ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமான பல முக்கிய கோப்புகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

நேற்று மாலை திடிரென இந்த கட்டிடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்தோடி வந்து தீயை அணைத்தனர். இந்த தீ அணைப்புக்கு 7 வாகனங்கள் பயன்படுத்துப் பட்டுள்ளன. இந்த தீ விபத்தில் பல கோப்புகள் நாசமானதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், “மோடிஜி, கோப்புக்களை எரிப்பது உங்களை தண்டனையில் இருந்து காப்பாற்றாது. உங்களது தீர்ப்பு தினம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.