டில்லி
வரும் 2020 ஆம் வருட மாதிரி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதமர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கடும் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பணப் புழக்கம் குறைந்து வருவதால் அதை மேம்படுத்த அரசு பல திட்டங்கள் தீட்டி வருகிறது. இதைச் சீர் செய்ய அரசு வரும் 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல சலுகைகள் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நிதி அமைச்சகம் தயாரித்துள்ள மாதிரி நிதிநிலை அறிக்கை பிரதமரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத நிதிநிலை அமைச்சக அதிகாரி ஒருவர், ”வரும் பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது இதற்கான மாதிரி அறிக்கை பிரதமர் ஒப்புதலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதில் வருமான வரிக் குறைப்புக்குப் பதில் மாற்று யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் விவசாயிகள் நலத் திட்டத்தின் கீழ் பல நிதி உதவிகள் நேரடியாக அளிக்க யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. வருமான வரிக் குறைப்பு மூலம் வரி செலுத்தும் 3 கோடி மக்கள் மட்டுமே பயன் பெறுவார்கள் ஆனால் இந்த முறையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்து மேலும் பலர் பயனடைவார்கள்
வருடத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோர் 10% கூடுதல் வரி செலுத்த வேண்டி வரலாம். வருமான வரி வரம்பிலும் மாறுதல்கள் கொண்டு வருவது பற்றியும் யோசனை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வருமான வரம்பினருக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிப்பது குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.