கொரோனா வைரசுக்கு உலகில் உள்ள பல நாடுகள் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. நம் ஊர் அரசியல்வாதிகள், தங்கள் பங்குக்கு கொரோனாவை விரட்ட விதவிதமான ஐடியாக்களை கொடுத்த வண்ணம் உள்ளனர்.

உத்தரபிரதேச முன்னாள் முதல் –அமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் சளைத்ததா என்ன? அந்த கட்சியும் கொரோனவுக்கு புதிய மருந்தை ‘’கண்டு பிடித்துள்ளது’’.

பகுஜன் சமாஜ் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர் பீம் ராஜ்பர், பல்லியா மாவட்டம் ரஸ்ரா என்ற இடத்தில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் ‘’ கள்ளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால், அந்த பானத்தை பருகுவோருக்கு கொரோனா இருந்தால் குணமாகி விடும்’’ என திருவாய் மலர்ந்தார்.

’’தங்கள் முன்னோர்கள் கள் அருந்தி உடல் வலிமையை பெருக்கி கொண்டார்கள்’’ என குறிப்பிட்ட பீம் ராஜ்பர் ’’கள்ளில் உள்ள வைட்டமின் ‘சி’ கண்ணுக்கும், பொட்டாசியம் இதயத்துக்கும் நல்லது’’ என மேலும் தெரிவித்தார்.

– பா. பாரதி