டில்லி

டில்லியை சேர்ந்த கல்லூரி மாணவி தனக்கு கருத்து சுதந்திரம் உண்டு எனவும் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் எனவும் கூறி உள்ளார்.

டில்லி பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராம்ஜாஸ் கல்லூரியின் மாணவி குர்மெகர் கவுர்.  பஞ்சாபிய பெண்னான இவரது தங்கை ஒரு ராணுவ அதிகாரி.  பிரச்சினைக்குரிய காஷ்மீர் பகுதியில் பாக் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் இவர் மரணம் அடைந்தார்.  இது குறித்து இணைய தளம் ஒன்றில் குர்மெகர் தனது தந்தையின் படத்தை வெளியிட்டு, “எனது தந்தையைக் கொன்றது பாகிஸ்தான் இல்லை. போர் தான் கொன்றது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அதை பா ஜ க வின் மாணவர் அணியான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் கடுமையாக கண்டித்தது.  இதனால் குர்மெகருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் பின்னூட்டம் இட்டனர்.  அவர் பதிந்த அந்தப் படம் வைரலாக பரவியது.  அவர் தேவை இல்லாமல் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கிறார் என பலரும் பேசத் தொடங்கினர்.  அவரை கண்டித்து ஒரு பிரபல கிரிக்கெட் வீரரும், ஒரு பிரபல பாலிவுட் நடிகரும் பதிவுகள் இட்டனர்.  மத்திய அமைச்சர் கிரன் ரிஜ்ஜு ”இந்தப் பெண்ணின் மனதை யார் இவ்வாறு கெடுத்தது” என டிவிட்டரில் இவரின் படத்துடன் பதிந்தார்.

அதன் பிறகு அவருக்கு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் ஐ சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல்கள் விடுத்தனர்.  அவரை அமைதியாக போகுமாறு அவரை சேர்ந்தவர்கள் வற்புறுத்தினர்.  ஆனால் குர்மெகர் மற்றொரு பதிவை தனது புகைப்படத்துடன் பதிந்தார். அதில் ”நான் டில்லி பல்கலைக்கழக மாணவி.  நான் அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தை கண்டு பயப்படவில்லை.  நான் தனி மனிதர் அல்ல.  மாணவ சமுதாயமே என் பின்னால் உள்ளது” என பதிந்துள்ளார்.

இது குறித்து கேட்கையில், குர்மெகர், “நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?  ஒரு சாதாரண பெண்ணாக என் கருத்தை நான் சொன்னேன்.  ஆனால் நான் கேளாமலேயே என்னை முன்னுக்கு தள்ளி உள்ளனர். நான் புகழ்பெறுவதற்காக எனது கருத்தை சொல்லவில்லை.  இருப்பினும் தற்போது எனது பேச்சையும் கருத்தையும் கேட்க பலர் முன் வந்துள்ளனர்.  நல்ல கருத்தை சொல்ல யாரிடமும் பயப்படத் தேவை இல்லை.  நான் நல்லது சொல்கிறேன் என்றால் அதை நான் ஏன் சொல்லக்கூடாது? என பதிலுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.