மேற்கு வங்க மாநிலம் நார்த் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பராசத் மக்களவைத் தொகுதிக்கான வேட்பாளராக ஸ்வபன் மஜும்தார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரை வேட்பாளராக அறிவித்ததில் இருந்து பாஜக தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஸ்வபன் மஜும்தாருக்கு எதிரான சுவரொட்டிகள் கட்சியின் தேர்தல் அலுவலகம் மற்றும் மாவட்ட கட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், ஸ்வபன் மஜும்தார் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர் என்றும் அதற்காக கைது செய்யப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

பிரமாண பத்திரத்தில் தன் மீதான குற்றங்களை மறைத்துள்ளதாக சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே அவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அசாமில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கு குறித்து ஸ்வபன் பிரமாணப் பத்திரத்தில் “தவறான” தகவல்களை அளித்துள்ளார் என்றும் அவர் தனது கல்வித் தகுதி மற்றும் சொத்துக்கள் குறித்த தவறான தகவல்களை அளித்துள்ளார் என்றும் அவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.