ஷில்லாங்: மேகாலயாவில்  நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும்  மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஆளுங்கட்சியான என்.பி.பி கட்சிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அங்கு கூட்டணி மந்திரிசபை அமையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

60தொகுதிகளைக்கொண்ட  வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையில் என்.பி.பி. என்னும் தேசிய மக்கள் கட்சி, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அங்கு;ளள  சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்திபோடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும்  பிப்ரவரி  27-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ந்தேதி நடைபெற்றது.

ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற  30 இடங்கள் தேவை. ஆனால், எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சி அமைப்பதில் இழுபறியில் உள்ளரது.

ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். முதல்-மந்திரி கான்ராட் சங்மா, தெற்கு துரா தொகுதியில் தனக்கு அடுத்த படியாக வந்த பா.ஜ.க. வேட்பாளர் பெர்னார்டு மராக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். கான்ராட் சங்மாவின் அண்ணன் ஜேம்ஸ் பன்சாங் சங்மா, 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த நிலையில், இந்த முறை தாடன்கிரே தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபா மராக்கிடம் 18 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவிடம் என்பிபி கட்சி ஆதரவு கோரியது.

இதையடுத்து மாநில பாஜக தலைவர் என்பிபி கட்சியின் தலைவருக்கு ஆதரவு தருவதாக  தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கான்ராட் சங்மா (வயது 45) தலைமையில் மீண்டும் என்.பி.பி., பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைகிறது.

இவர் முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் ஆவார். முதல்-மந்திரி கான்ராட் சங்மா, மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஆசியை நாடி உள்ளார்.

இதுதொடர்பாக அசாம் முதலமைச்சர்  ஹிமாந்தா பிஸ்வா சர்மா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “மேகாலயாவில் என்.பி.பி. கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு மாநில பா.ஜ.க.வுக்கு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா அறிவுரை வழங்கி உள்ளார்” என தெரிவித்துள்ளார்.