சண்டிகர்

நடைபெற  உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது.

வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 மக்களவை தொகுதிகளுக்கு ஜூன் 1 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

தேர்தலை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளம் கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

பா.ஜ.க. மாநில தலைவர் சுனில் ஜக்கார் ‘எக்ஸ்’ தளத்தில்,

“பஞ்சாபில் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடப் போகிறது. பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டு பா.ஜ.க. இந்த முடிவை எடுத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் பா.ஜ.க. செய்த பணிகள் குறித்து அனைவருக்கும் தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்பட்டன” 

என்று பதிவிட்டுள்ளார்.