டெல்லி:

பிரபல ஆங்கில செய்தி சேனல் தொகுப்பாளர் அர்னாப் கஸ்வமி ‘ரிபப்ளிக்’ என்ற பெயரில் ஆங்கில செய்தி சேனல் ஆரம்பிக்கவுள்ளார். ரிபப்ளிக் என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று பாஜ மூத்த எம்பி சுப்ரமணியன் சுவாமி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தேசிய சின்னம் மற்றும் பெயர் வணிக ரீதியில் பயன்படுத்தக் கூடாது என்ற 1950ம் ஆண்டு சட்ட விதியை மீறும் செயல். குடியரசுத் தலைவர், கவர்னர், குடியரசு, மத்திய அரசின் அலுவலக முத்திரை, பெயர், சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. ஒரு செய்தி சேனலுக்கு ரிபப்ளிக் என்ற பெயருக்கு அனுமதி வழங்கியது சட்டத்துக்கு எதிரானதாகும். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அர்னாப்புடன் சுப்ரமணியன் சுவாமி மோதுவது இது முதல் முறையல்ல. டிவி விவாதங்களில் பல முறை சுப்ரமணியன் சுவாமி கலந்து கொண்டுள்ளார். 2014ம் ஆண்டில் நடந்த ஒரு விவாத மோதலில் அர்னாப்பை சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு அரங்கில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அந்த நிகழ்ச்சியில் சாமி கலந்து கொள்ளவில்லை.

கடந்தாண்டு பிரதமர் மோடியுடன் நேரடி பேட்டி எடுத்த போது, சுவாமி குறித்து அர்னாப் கேள்வி எழுப்பி, மோடியின் விமர்சனத்துக்கு சுவாமி ஆளானார். இதன் பின் அர்னாப்பை தொடர்ந்து டுவிட்டர் மூலம் சுவாமி தாக்கி வந்தார்.
‘டைமஸ் நவ்’ டிவியில் முதன்மை ஆசிரியர் பதவியில் இருந்து அர்னாப் கடந்த மாதம் 15ம் தேதி ராஜினாமா செய்தார்.

தற்போது ரிபப்ளிக் என்ற செய்தி சேனலை தொடங்குவதை பல வகைகளில் அர்னாப் பிரச்சாரம் செய்து வருகிறார். சுதந்திரமாக செய்தி வெளியிடப்படும். இந்த துறையை அரசியல் லாபிகளிடம் காப்பாற்றப்படும் என்றும் அவர் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.