டெல்லி: தமிழ்நாட்டில் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை பாஜக தேசிய தலைமை அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசை குறை சொன்னால், உடனே அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.  சாமானிய மக்கள் கூற தங்களது குறையை சொல்ல முடியாத அளவுக்கு தமிழ்நாடு அரசும், காவல்துறையும் கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அரசுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை காவல்துறை மூலம் நள்ளிரவில் கைது செய்து வருகிறது.  மேலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம் அறிவித்தால், அதை ஒடுக்கும் வகையிலும் காவல்துறையை கொண்ட மிரட்டல் விடும் போக்கு அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நள்ளிரவு நடவடிக்கைக்கு பல கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இநத் நிலையில்,  தமிழக அரசால், பாஜகவினர் எதிர்கொண்டு வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா  உத்தரவிட்டார். அதன்படி, இந்த குழுவில், கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான டி.வி.சதானந்த கவுடா, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும், மக்களவை உறுப்பினருமான சத்யபால் சிங், ஆந்திர மாநில பாஜக தலைவர் டி.புரந்தேஸ்வரி, மக்களவை உறுப்பினர் பி.சி. மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த 4 பேர் குழுவினர்,   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கையை பாஜக மேலிடத்திடம் விரைவில் வழங்கும் என கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில் , கடந்த 2 ஆண்டுகளாக பாஜகவின் சமூக ஊடக நிர்வாகிகள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகின்றனர். நள்ளிரவு மற்றும் அதிகாலையில் கைது செய்வது, வார இறுதி நாட்கள் அல்லது தொடர் விடுமுறை நாட்களில் கைது செய்வது போன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபடுகிறது. சமூக மற்றும் முக்கிய ஊடகங்களில் பிரபலமானவர்களை குறிவைத்து கைது செய்வதில் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது. இதுபோன்ற அத்துமீறல்களையும், அதிகார துஷ்பிரயோகத்தையும் இந்த குழு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என நம்புகிறோம் என கூறப்பட்டுள்ளது.