பார்வாணி, மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேச மாநில பாஜக தலைவரான மனோஜ் தாக்கரேவை மற்றொரு பாஜக தலைவர் தாராசந்த் ராதோர் தனது மகனுடன் சேர்ந்து கூலிபடை மூலம் கொலை செய்துள்ளார்.

 

 

மத்தியப் பிரதேச மாநிலம் பார்வானியை சேர்ந்த பாஜக தலைவர் மனோஜ் தாக்கரே. இவர் வார்லா பகுதியில் வசித்து வருகிறார். இவர் தினமும் காலை வேளையில் அருகில் உள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி செய்வது வழக்கமாகும். கடந்த வாரம் வழக்கம் போல மனோஜ் தாக்கரே கடந்த வாரம் நடைப்பயிற்சி செய்துள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத சிலரால் மனோஜ் தாக்கப்பட்டு பிணமாக மைதானத்தில் கிடந்துள்ளார். அவருடைய சடலத்தின் அருகே இரத்தக் கறை படிந்த ஒரு பெரிய பாறை கிடந்துள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மனோஜ் தாக்கரேவின் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புக்கள் பதிவாகி உள்ளது கண்டறியப்பட்டது. அதை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்த போது மற்றொரு பாஜக தலைவரான தாராசந்த் ராதோர் அந்த மிரட்டலை விடுத்துள்ளது கண்டறியப்பட்டது.

மேலும் நடந்த விசாரணையில் தாராசந்த் ராதோர் மற்றும் அவருடைய மகன் திக்விஜய் ராதோர் ஆகிய இருவரும் இணைந்து இந்த கொலையை கூலிப்படையினர் மூலம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக அவர்கள் ரூ.5 லட்சம் பணம் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் தாராசந்த், அவர் மகன் திக்விஜய் மற்றும் கூலிபடையை சேர்ந்த ஜகாரியா, நானு, காலு, தாலிப் மற்றும் அனில் ஆகியோரை கைது செய்துள்ளனர்.