பாஜக தனது திரைமறைவு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு, பயங்கரவாதம் போன்ற நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, இந்து-முஸ்லீம் போன்ற உணர்ச்சிகரமான பிரச்சினைகளைக் கொண்டு இளைஞர்களை பாஜக தவறாக வழிநடத்துவதாக அவர் சாடினார்.

சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் பிரிவின் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், மத்திய அரசு தேவையான வேலை வாய்ப்புகளை வழங்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

கல்வியில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர் பாஜக தனது திரைமறைவு திட்டங்களை செயல்படுத்துவதில் தீவிரமாக உள்ளதாகவும், இதுபோன்ற செயல்திட்டங்களை தடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், தொழிற்படிப்பில் பட்டம் பெற்றவர்களைக் கூட பாஜக அரசாங்கங்கள் டெலிவரி பாய்களாக மாற்றுகின்றன என்றும் தனது செயற்திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நாடகத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.