டில்லி

ஏர் இந்தியா மற்றும் பாரத பெட்ரோலியம் நிறுவனங்களை விற்கப்போவதாக நிதி அமைச்சர் அறிவித்ததற்குக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கடும் நஷ்டத்தில் உள்ளதாக பாஜக அரசு தெரிவித்து வந்தது.   அத்துடன் இந்த நிறுவனங்களின் புனரமைப்புக்காக நிதி உதவி வழங்கவும் அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கடும் நஷ்டம் காரணமாக ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகிய நிறுவனங்களை முழுவதுமாக தனியாருக்கு விற்க உள்ளதாக அறிவித்தார்.  அத்துடன் இந்த விற்பனை வரும் மார்ச் மாதத்துக்குள் முடிந்து விடும் எனவும் தெரிவித்தார்.

இதற்குக் காங்கிரஸ் பொதுச் செயலர்  பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் இன்று தனது டிவிட்டரில், ”இந்தியாவின் மிகச் சிறந்த நிறுவனங்களை பாஜக அரசு நஷ்டமாக்கி அவற்றை விற்று விடத் திட்டமிட்டு வருகிறது.   அரசு நிறுவனங்கள் நமக்குப் பெருமை சேர்ப்பவை. அவை பொன் முட்டையிடும்  பறவைகள்” எனப்  பதிந்துள்ளார்.