சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தனிப்பெரும்பான்மை பெறும் அளவுக்கு பாஜக 301 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

2019ம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் வாக்கு பதிவு கடந்த மாதம் 7ம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. பாஜக தலைமையிலான கூட்டணியில் அதிமுக, சிவசேனா, ஜனதா தளம், என்.ஆர் காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜகவை எதிர்த்து களம் காணும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியுள்ளன.

வாக்குப்பதிவுகள் கடந்த 19ம் தேதி நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து முன்னிலை பெற்றுவந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றி, மோடி மீண்டும் ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது.

தேசிய அளவிலான மாலை 4 மணி முன்னிலை நிலவரப்படி,

பாஜக: 301 தொகுதிகள்

காங்கிரஸ்: 51 தொகுதிகள்

திமுக: 37 தொகுதிகள்

ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: 25 தொகுதிகள்

திரினாமுல் காங்கிரஸ்: 23 தொகுதிகள்

இவ்வாறு நிலவரங்கள் வெளியாகியுள்ளன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 342 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 93 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதிமுகவிடமிருந்த 3வது பெரிய கட்சி என்கிற அந்தஸ்தை இத்தேர்தல் மூலம் திமுக தட்டிப்பறித்துள்ள அதேநேரம், எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி கூடுதலாக தேவைப்படும் நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.