டில்லி,

போர் விமான கொள்முதலில் பா.ஜ.க. அரசு பெரும் ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியிருப்பதற்கு பாஜக மறப்பு தெரிவித்துள்ளது.

இந்திய விமானப்படைக்கு 126 போர் விமானங்கள் வாங்க 2007–ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் டெண்டர் விடப்பட்டது. அதில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆகும்.  ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து, “ரபேல் நிறுவனத்திடம் இருந்து 36 போர் விமானங்களை தலா ரூ.1,570 கோடி செலவில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்சை புறக்கணித்து விட்டு, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ரபேல் நிறுவனம் கூட்டாக விமானங்களை தயாரிக்க இருக்கிறது.  இதன் மூலம் தேச நலனையும், தேச பாதுகாப்பையும் மத்திய பாஜக அரசு விட்டுக் கொடுத்துள்ளது. விமானங்களை அதிக விலைக்கு வாங்குவதால், மாபெரும் ஊழல் நடந்துள்ளது. இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இக்குற்றச்சாட்டை பா.ஜனதா மறுத்துள்ளது. இதுகுறித்து அதன் செய்தித்தொடர்பாளர் நரசிம்ம ராவ், ‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழலுக்காக சோனியா குடும்பம் பதில் அளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.   அதை திசைதிருப்பவே காங்கிரஸ் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.