இம்பால்

பிரேன் சிங்  2 ஆம் முறையாக மணிப்பூர் மாநில முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாபை தவிர உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதில் 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூரில் 32 தொகுதிகளை பாஜ கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்று புதிய அரசு அமைக்கும் பணிகளை பாஜக தொடங்கியது.

நேற்று தலைநகர இம்பாலில் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்காகச் சட்டமன்ற கட்சி கூட்டம் நடந்தது. பாஜக மேலிடப் பார்வையாளர்களான நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிர்மலா சீதாராமன் சட்டமன்ற கட்சி தலைவராக பிரேன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். பிரேன் சிங் ஆளுநர் இல.கணேசனைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெற்றது.

பிரேன் சிங் இந்த விழாவில் 2வது முறையாக  முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன், பதவிபிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  முதல்வருடன் 5 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.