ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 15 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக வனவிலங்கு காப்பாளர் மோகன்லால் மீனா கூறி இருப்பதாவது: ஜெய்ப்பூர் உயிரியல் பூங்காவில் 4 பறவைகள், சில வாத்துக்கள் இறந்து கிடந்துள்ளன. இதையடுத்து உயிரியல் பூங்கா சுத்திகரிக்கப்பட்டு மூடப்பட்டது.

இறந்து கிடந்த பறவைகளின் மாதிரிகள் சேகரித்து போபாலில் உள்ள ஆய்வகத்திற்குச் சோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஹனுமன்கர், ஜெய்சால்மர், பிகானேர், பன்ஸ்வாரா, சிரோஹி உள்ளிட்ட பல  மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 264 காகங்கள் இறந்துள்ளன. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 2,500 காகங்கள் உயிரிழந்துள்ளன. மேலும் 180 மயில்கள், 190 புறாக்கள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.