‘’பீகாரில் கூட்டணிக் கட்சிகளுடன் 10 நாட்களில் தொகுதிப் பங்கீடு’ -ராகுல் காந்தி

பீகார் மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடக்க உள்ளது.

அந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.மேலும் சில சிறிய கட்சிகளும் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

தேர்தலை எதிர் கொள்வது தொடர்பாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டெல்லியில் இருந்த படி, பீகார் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம்  கலந்துரையாடினார்.

அப்போது அவர்’’ பீகார் மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இன்னும் 10 முதல் 15 நாட்களில் இறுதி செய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

‘’இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த பீகார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சக்தி சிங் கோகில் , இரண்டொரு நாட்களில் பீகார்  வருவார் ‘’ என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி ’’தேர்தலை  எதிர்கொள்ள அனைத்து காங்கிரசாரும் இப்போதே தயாராகுங்கள்’’ என்று உற்சாகப்படுத்தினார்.

ராகுல் காந்தியுடனான காணொலி காட்சி கலந்துரையாடலில் பீகார் மாநில காங்கிரசார் ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

-பா.பாரதி.