டில்லி

போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் 8 வருடங்களாகச் சுற்றிய வங்கதேச நபர் டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

தென் கொரியாவில் இருந்து இந்தியா வந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை டில்லியில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.  பாஸ்போர்ட்டில் அவருடைய பெயர் அனுபம் சவுத்ரி என்றும் மராட்டிய மாநிலம் நாக்பூரைப் பூர்விகமாகக் கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த பயணியிடம் நடந்த விசாரணையில் அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருடைய நிஜ பெயர் அனுபம் பருவா. வங்காள தேசத்தின் சிட்டகாங் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அவர் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய வங்கதேச பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கொல்கத்தா வந்துள்ளார். பிறகு நாக்பூருக்குச் சென்று அங்குப் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் ஏஜேண்ட் ஜாய் குமார் என்பவரைச் சந்தித்துள்ளார். முதலில் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருந்த இந்திய முகவரியில் போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் எடுத்துள்ளனர்.

இதைப் பயன்படுத்தி போலி பாஸ்போர்ட்டை உருவாக்கியுள்ளனர். இதற்காக ஜாய் குமார் ரூ.20 ஆயிரம் பெற்றுள்ளார். அவர் சட்டவிரோதமாக இதன் மூலம் பலமுறை வங்கதேசத்திற்குச் சென்று வந்துள்ளார். கடந்த 2016-ல் இந்த போலி இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தாய்லாந்து நாட்டிற்குச் சென்று ஒரு வருடங்கள் கழித்து இந்தியா திரும்பியுள்ளார்.

அதற்குப் பிறகுத் தென் கொரியா சென்று அங்குக் கட்டிடத் தொழிலாளராக பணியாற்றியுள்ளார். அவர் நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்ததால் தென் கொரியா காவல்துறையால் பிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் அப்படி வரும் பொழுது இந்த முறை டில்லி விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் கையும் களவுமாகச் சிக்கி உள்ளார். சுமார் 8 வருடங்களாகப் போலி இந்திய பாஸ்போர்ட்டுடன் சுற்றி உள்ளார். அவர் மீது காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.