சேலம்

நாளை நடைபெற உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு ஆடை அணிந்த வர விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற உள்ளது. முன்னதாக பல்கலைக்கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில், விழாவில் அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்துவருவதை உறுதி செய்யுமாறும், கைப்பேசிகள் எடுத்து வருவதைத் தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவுக்கு மாணவர்கள், மற்றும் அவர்களது பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவைத் திரும்பப் பெற்றது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களது நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கனவே அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.