புனே: ஜானி பேர்ஸ்டோவால் பல பேட்டிங் சாதனைகளை முறியடிக்க முடியும் என்று பாராட்டியுள்ளார் அந்த அணியின் தற்காலிக ஒருநாள் கேப்டன் ஜோஸ் பட்லர்.

இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார் பேர்ஸ்டோ. தற்போதுவரை மொத்தம் 11 ஒருநாள் சதங்களை அடித்துள்ளார் பேர்ஸ்டோ.

இந்நிலையில், அவர் தொடர்பாக தற்காலிக கேப்டன் ஜோஸ் பட்லர் கூறியுள்ளதாவது, “கடந்த சில ஆண்டுகளாக பேர்ஸ்டோ, நம்ப முடியாத வகையில் ஆடி வருகிறார். உலகின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மென்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக அவர் உலகின் சிறந்த 10 பேட்ஸ்மென்களில் ஒருவராக இருக்கிறார். எனவே, அவர் பல பேட்டிங் சாதனைகளை முறியடிப்பார் என்று சொன்னால் அதில் மிகையில்லை. அவருக்கு எங்கள் அணியில் சரியான அங்கீகாரம் கொடுக்கப்பட்டே வருகிறது.

அவர், குறைந்த ஓவர் போட்டிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறார். அவருக்கு பந்து வீசுவது என்றால், பெளலர்களுக்கு எப்போதுமே பயம்தான். அவர் எப்போதுமே எங்களின் முதன்மையான ஆட்டக்காரர்” என்றுள்ளார் பட்லர்.