சென்னை

லாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல்.3-ம் தேதி சென்னையில் உள்ள திருவான்மியூரில் கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி நடனத்துறை உதவிப் பேராசிரியர் ஹரிபத்மனை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமீன் கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஹரிபத்மனுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

விடுமுறை கால சிறப்பு அமர்வில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. ஹரிபத்மன் தரப்பில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு எதிராகத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.  காவல்துறை தரப்பில், இந்த சம்பவம் தொடர்பாக 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஹரிபத்மன் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உள்விசாரணைக் குழுவை மாற்றியமைக்கக் கோரி 7 மாணவிகள் தொடர்ந்துள்ள வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது என்றும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டியிருப்பதால் ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன், குற்றம் சாட்டப்பட்ட ஹரிபத்மனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, விசாரணையை வரும் ஜூன் 16-க்கு தள்ளி வைத்தார். அதையடுத்து இந்த மனுவைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதித்தார்.