சேலம்: தென்மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகரும், பிரபல தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி தலைமையிலான  அதிமுகவில் இணைந்துள்ளார்.ஓபிஎஸ் சமூகத்தைச் சேர்ந்தவரான சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த  அய்யாதுரை பாண்டியனுக்கு தென்மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதுமட்டுமல்லாமல் தென்காசி மாவட்டத்தில் ஏழை எளிய வீட்டு பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்று உதவி வருகிறார். கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்.  அய்யாதுரை பாண்டியன் பேரவை என்ற பெயரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வந்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் சீட் இல்லை என்ற நிலை வந்த போது அமமுகவில் இணைந்தார். அங்கு டிடிவி தினகரனின் நடவடிக்கை களும், மாணிக்கராஜாவின் போக்கும் இவருக்கு பிடிக்காததால் அங்கிருந்தும் வெளியேறி அரசியல் செய்யாமல் அமைதி காத்து வந்தார்.

இதற்கிடையில், அவரை பாஜகவுக்கு  இழுக்க காய்கள் நகர்த்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், எடப்பாடி தரப்பினர் அவரை சந்தித்து, தங்களது பக்கம் இழுத்துள்ளனர்.  எடப்பாடி பழனிசாமி  தூதுவர்களாக இசக்கி சுப்பையா  உள்பட 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று  அய்யாதுரை பாண்டியனை தங்களது பக்கம் இழுத்துள்ளனர். இதற்கு முழு மூச்சாக ஈடுபட்டவர் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா.

இதைத்தொடர்ந்து, அய்யாதுரை பாண்டியன், எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டுக்கே அழைத்து வந்து, எடப்பாடி அதிமுகவில் இணைய வைத்துள்ளார்.  விஜய தசமியான இன்று எடப்பாடி பழனிசாமி  தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளார் அய்யாதுரை பாண்டியன். அவருடன் 10,000 பேர் இணையவுள்ள நிலையில் அவர்களுடைய பெயர் விவரங்களுடன் கூடிய பட்டியல் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.

விரைவில் அவர்களுக்கு உறுப்பினர் அட்டை தயாரானதும் தென் மாவட்டத்தில் ஒரு பெரிய விழாவை எடுக்க திட்டமிட்டுள்ளார் அய்யாதுரை பாண்டியன் என்று தென்காசி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.