அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக கோயில் கட்டப்படுகிறது. ராமர் கோயிலை கட்ட  ரூ.1,100 கோடி செலவாகும் என்று கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி, கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி துவங்கியது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னர், நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யும் பணி தொடங்கி பிப்ரவரி 27ம் தேதியுடன் நிறைவடைந்தது.

45 நாட்களாக நடைபெற்று வந்த நன்கொடை பெறும் பணி முடிந்த நிலையில், 2,100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.