டில்லி

அயோத்தியில் அமைக்கப்படும் விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட உள்ளது.

நாளை உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்திக்குப் பிரதமர் மோடி வருகை புரிந்து அங்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம், விரிவு படுத்தப்பட்ட சாலைகள் உள்ளிட்டவற்றைத் திறந்து வைக்க உள்ளார்.

மேலும் ரூ.1,450 கோடி செலவில் அயோத்தியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் நாளை திறந்து வைக்கவுள்ளார். விமான நிலையத்துக்கு ராமாயணம் எழுதிய மகரிஷி வால்மீகி பெயர் சூட்டப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

‘அயோத்தி கோவில் சந்திப்பு’ என்ற பெயருடன் ரூ.240 கோடிக்கும் மேற்பட்ட செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையத்தையும் அவர் திறந்து வைக்கிறார். ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள், உணவு அரங்குகள், பூஜைப் பொருள் கடைகள், ஓய்வறைகள், குழந்தை பராமரிப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த பயணத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் 2 அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் 6 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.