ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த மாநகர காவல் படத்தை இயக்கிய எம். தியாகராஜன், ஆதரவின்றி ஏ.வி.எம். ஸ்டூடியோ எதிரில் தெருவோரம் இறந்து கிடந்தது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் 1991ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ஏ.வி.எம். நிறுவனத்தின் 150 வது படமான ‘மாநகர காவல்’ படத்தில் சுமா, நாசர், எம்.என்.நம்பியார், லட்சுமி, செந்தில், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை இயக்கிய எம். தியாகராஜன் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தைப் பிரிந்து தனியாக சாலிகிராமத்தில் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை ஏ.வி.எம். ஸ்டூடியோ அருகில் ஆதரவின்றி கிடந்த தியாகராஜனின் உடலை உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

வெற்றிப்பட இயக்குனர் ஒருவர் அனாதையாக சாலையோரம் இறந்த நிகழ்வு தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் மட்டுமன்றி பொதுமக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.