சென்னை:
திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமாகியுள்ளது.

திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வீதம் 24 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் வீதம் 4 தொகுதிகள் என தற்போதுவரை 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தொகுதி பங்கீடு முடிவடைந்திருக்கும் நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகள் இறுதி செய்யப்படும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாசுதேவநல்லூர் (தனி), சாத்தூர், அரியலூர், பல்லடம், மதுராந்தகம் (தனி), மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது.

அவிநாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராக சபாநாயகர் தனபால் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆதித்தமிழர் பேரவை களமிறங்குகிறது.

திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மணப்பாறை, அரவக்குறிச்சி தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.