vaiko
கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என வைகோ அறிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரச்சாரத்தின்போது இன்று மதியம் 1.45 மணிக்கு இதை அறிவித்தார்.
என்னை குறிவைத்து சாதிமோதல் பிரச்சனை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதால் நான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். இந்த தேர்தலில் தேமுதிக – ம.ந.கூ. – தமாகா கூட்டணிக்காக பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபடுவேன் என்று தான் விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
நேற்று கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் வைகோ பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள தேவர் சிலை அருகே ம.தி.மு.க. மற்றும் மக்கள் நல கூட்டணியினர் வைகோவிற்கு வரவேற்பு அளிப்பதற்காக திரண்டு நின்று கொண்டிருந்தனர்.
மாலை 5.30 மணிக்கு அங்கு வந்த வைகோ தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக வேனில் இருந்து இறங்கி நடந்து சென்றார். அப்போது தேவர் சிலை அருகே நின்று கொண்டிருந்த வாலிபர்கள் தேவர் சிலைக்கு வைகோ மாலை அணிவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாலை அணிவிக்காமல் வைகோ திரும்பி சென்றார்.
பின்னர் அவர் அப்பகுதியில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் வைகோ மீண்டும் அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்றார். அப்போதும் வைகோ தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என  ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலர்,   எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்த வாலிபர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து வைகோவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர்  மீது தடியடி நடத்தி போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.