vinthiya
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து நடிகை விந்தியா ராயப்பேட்டை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “எம்ஜிஆர் பேசியது புரிந்ததா என்று பிரேமலதா கேட்கிறார். எவ்வளவு தைரியம் இருந்தால் கேட்பார்கள். எங்க புரட்சித் தலைவர் போட்டோ போதும் ஓட்டு வாங்க. விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று சொல்கிறார்கள். எங்க புரட்சித் தலைவர் கருணாநிதியை நாக்கு மடித்து பேசியதில்லை. ஆனால் கட்சி ஆரம்பித்த உடனேயே முதலமைச்சரானார். உங்களைப்போல நாக்கை மடித்துப் பேசி நாடாளுமன்றத் தேர்தல்போல நாசமா போகல. டெபாசிட் வாங்க திராணி இல்லாத உங்களுக்கெல்லாம் ஒரு கட்சி. ஒரு சின்னம்.
இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கிற போர் என்கிறார்கள். எல்லா பக்கமும், பேரம் பேசி பேரம் பேசி விலைபோகாத வேஸ்ட் பீஸ் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஆதரவு இல்லாதவங்க அனாதை ஆசிரமம் ஆரம்பித்த மாதிரி ஒரு கூட்டணி ஆரம்பித்திருக்கிறார்கள். அதை வச்சிக்கிட்டு ஆட்சியை பிடிப்பார்களாம். பல் இல்லாதவன் பஞ்சு மிட்டாய்க்கு ஆசப்படலாம். பட்டானிக்கு ஆசைப்படக்கூடாது.
விஜயகாந்த், காந்தி மாதிரி, நேரு மாதிரி என்று பிரேமலதா சொல்கிறார். காந்தி இந்தியர்களுக்காக வெளிநாடு போனார். உங்களை மாதிரி வைத்தியத்துக்காக வெளிநாடு போகவில்லை. உப்பு எடுக்க நடந்தவரையும், மப்பு அடிச்சி படுத்தவரையும் ஒன்றாக பேசுறீங்களே. ஒரு மேடையில பிரேமலதா பேசுகிறார் திமுகவும், காங்கிரசும் 10 வருசம் ஆட்சியில் இருந்து நாட்டை கெடுத்துவிட்டார்கள். பாவம் வாசன் காலில் கட்டெரும்பு கடித்த மாதிரி நெலிகிறார். ஏனென்றால் அந்த 10 வருசமும் மத்திய அமைச்சராக இருந்தது வாசன்.
வாய்க் கூசாமல் சொல்கிறார் வாசன், விஜயகாந்த் உருவில் அய்யா மூப்பனாரை பார்க்கிறேன். திருமா சொல்கிறார் விஜயகாந்த் உருவில் அம்பேத்கரை பார்க்கிறேன். வைகோ சொல்கிறார் பிரேமலதா உருவில் அன்னை தெரசாவை பார்க்கிறேன். இவங்கக் கூட பரவாயில்லை. விஜயகாந்த் பேசுவது திருக்குறள் கேட்பது போல இருக்கிறது என்று முத்தரசன் சொல்கிறார். விஜயகாந்த் பேசுவது தமிழ்தானா என்று நிறைய பேருக்கு டவுட் இருக்கிறது.
பிரேமலதா மதுவிலக்கை பற்றி பேசுகிறார். நீங்க உங்க வீட்டுல முதல்ல மதுவிலக்கை கொண்டு வாருங்கள். ஒரு ஐந்து நிமிஷம் பேசுங்க கேப்டன் என்று சொன்னால், வாயிலேயே வயலின் வாசிக்கிறார். போன தேர்தல்ல எங்கக் கூட வந்துதானே ஓட்டு கேட்டீங்க. அப்பவே மதுவிலக்கு பற்றி பேசியிருக்கலாமே. அப்ப பேசாமல் இருந்தீங்க. மேடையில எல்லோருக்கு பேச மைக் வேணும். விஜயகாந்த்துக்கு நிக்கவே மைக் வேணும்.
வாசன் சொல்கிறார் விஜயகாந்த் தலைமையில் நாங்கள் சவாரி செய்கிறோம். பாவம் அந்த சவாரியில் போறவங்க எல்லாம் என்னவார்கள். இதைக் கேட்டால் வடிவேலுவும், என்னத்த கண்ணையாவும் காரில் போகும் காமடி நினைவுக்கு வருகிறது. தொண்டர்களைப் பற்றி கவலைப்படாமல் தலைவர்கள் பணத்துக்காகவும், பதவிக்காகவும் கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள்”. என்று குறிப்பிட்டார்.