மெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய வம்சாவளி பெண்மணியான கல்பனா சாவ்லா மறைந்த தினம் இன்று.

கடந்த 2003ம் ஆண்டு விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக விண்கலம் வெடித்து சிதறியதில் தனது உயிரை இழந்த கல்பனா சாவ்லா குறித்து திரும்பி பார்க்கலாம்.

1961ம் ஆண்டு ஜூலை 1ந்தேதி  இந்தியாவின் அரியானா மாநிலத்தில் கர்னல் என்ற பகுதியில் பிறந்த கல்பனா சாவ்லாவுக்கு  சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரனும் இருந்தனர்.

இவர் தனது தொடக்க கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கினார். 1982 ம் ஆண்டு சண்டிகரில் உள்ள “பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்” விமான ஊர்தியியல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டமும் பெற்றார்.

பின்னர், 1984 ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள “டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்” விண்வெளிப் பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1986ல் பௌல்தேரில் உள்ள “கோலோரடோ பல்கலைக்கழகத்தில்” இரண்டாவது முதுகலைப் பட்டமும், பிறகு 1988ல் வெண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

 

1988 ஆம் ஆண்டு, நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் “ஒசெர்செட் மேதொட்ஸ் இன்க்யின்” துணைத்தலைவராக பணியாற்றிய அவர் வி/எஸ்.டி.ஓ.எல் (V/STOL) இல் சி.எஃடி (CFD) ஆராய்ச்சி செய்தார்.

விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக்கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார்.

ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார். 1995 ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் “கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ்-87 (STS-87) ல்” பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

1997 ம் ஆண்டு மேற்கொண்ட இந்த பயணத்தில், சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனைப் புரிந்து வெற்றிகரமாக பூமி திரும்பினார்.

இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் பெற்றார்.

அதைத்தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் தன்னுடைய இரண்டாவது பயணத்திற்குத் தயாரானார்.

மீண்டும்,  2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தி லிருந்து கொலம்பியா விண்கலமான எஸ்.டி.எஸ்-107 (STS-107) மூலம் விண்வெளிக்கு பயணமானார்.

இந்த பயணத்தின்போது அவருடன்  மேலும் 7  விஞ்ஞானிகள்  பயணித்தனர். 16 நாட்கள்  ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த அந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்ஸாஸ் வான்பரப்பில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக  வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் கல்பனா சாவ்லா உள்பட ஏழு  விண்வெளி வீரர்களும் பலியாகினர். இது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஒரு சாதாரணப் பள்ளியில் படித்து உலகமே வியக்கும் அளவில் விண்வெளித்துறையில் சாதனை படைத்த கல்பனா சாவ்லாவின் இழப்பு இந்தியாவுக்கு பெரும் இழப்பை  ஏற்படுத்தியது. இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர்களில் கல்பனா சாவ்லாவும் ஒருவர்.

அவரது தியாகத்தை போற்றும் விதத்தில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா,  தமிழ்நாட்டில் வீர, தீர, சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என அறிவித்து, ஆண்டுதோறும், இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல,  இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் “கல்பனா சாவ்லா விருதினை” 2004 ஆம் ஆண்டிலிருந்து வழங்கி வருகிறது.

நியூயார்க்கில் உள்ள ஒரு தெருவிற்கு “கல்பனா வே” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  மேலும், நாசா ஆய்வகம், கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் விதமாக ஒரு அதிநவீன கணினியை அற்பணித்துள்ளது.

இந்தியாவிலும் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கப் பொது நிறுவனங்களுக்கு, கல்பனா சாவ்லாவின் நினைவைப் பறைசாற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஒரு விண்வெளி பொறியாளராக வாழ்ந்துக் காட்டிய  கல்பனா சாவ்லா தனது  41வது வயதில் (2003ம் ஆண்டு பிப்ரவரி 1ந்தேதி)  உலக மக்களின் நட்சத்திரமாகி விண்ணுலகுக்கு சென்றுவிட்டார்…